Wednesday, April 2, 2008

சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் நடிகர்கள் உண்ணாவிரதம் ரஜினி பங்கேற்பாரா?

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து நாளை மறுநாள் சேப்பாக்கத்தில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இதில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பெங்களூரில் தியேட்டர், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நாளை மறுநாள் (4&ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர¢ சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தலைமையில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.உண்ணாவிரத போராட்டத்துக்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 100 பேர் அமரும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர் நடிகைகள், பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருப்பார்கள். மேடைக்கு எதிரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே காவிரி பிரச்னைக்காக நடந்த ª நடிகர், நடிகைகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை விட ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல இப்போதும் அவர் தனியாக ஏதாவது போராட்டம் நடத்துவார் என்று ஒரு தரப்பினரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகிறார்கள்.கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடத்து வந்த Ôகுசேலன்Õ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்து ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். மீண்டும் வரும் 9&ம் தேதிதான் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது சென்னையில் இருக்கும் ரஜினி, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. உண்ணாவிரதத்தில் நேரடியாக பங்கேற்காமல் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு சால்வை அணிவித்து, ஆதரவு தெரிவித்து வந்துவிடுவார் என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: