நேற்றிரவே இப் பதிவைப் பதிய நினைத்தேன். ஒரு நாள் தாமதம். நாள் ஒன்று நீண்டிருப்பினும் நினைக்குந்தோறும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அதன் மகாத்மியமாகவும் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த நண்பன் ஒருவன் நாளிதழில் சுருட்டி வைத்திருந்த ஒரு போத்தலைக் கொடுத்தான். இலங்கைச் சாராயம் என்றான். சாராயம் குறித்து இதுவரை எனக்கு ஒரு பயப்பிராந்தியே இருந்தது. இந்திய தயாரிப்பு மற்றும் விதேச தேசத்தின் முதன்மையான மதுக்கள் அனைத்தையும் பருகி இருக்கிறேன். எனினும் சாராயம் மீது ஓர் அச்சமே இருந்தது. குறிப்பாக அதன் நெடி. பிறகு அது தயாரிக்கும் விதம் குறித்து சொல்லப்படும் கதைகள். பேட்டரிக்கள், அழுகிய பழம், விஷ ஜந்துகள் இத்யாதி. அதனால் நெருங்காதே இருந்தேன்.
தயக்கத்தோடுதான் நாளிதழ்ச் சுருளைப் பிரித்தேன். நீண்ட வெண் பாட்டில். உள்ளே படிகத் தெளிவில் திரவம். பெயர் வைற் டயமண்ட். குவளையில் சிறிது நிரப்பி, தூய நீர் கலந்து பருகினால்...ஆஹா அற்புதம். அதன் வாசனை. நேர்த்தியாய் நெஞ்சுக் குழியில் பாய்ந்து இறங்கும் சுகம். மெலிதாய் கிளர்ந்து பரவும் போதை.
நன்றாய் இருந்தது என்பது சாதாரண வார்த்தை. வேறு தெரியவில்லை. எனவே நன்றாய் இருந்தது. போத்தலில் இருந்த தமிழ் வாசகம் இன்னும் போதையேற்றியது. வைற். சாராய ஸ்ட்ரெங்க்த் அளவும் குறிக்கப்பட்டிருந்தது. அதன் தமிழ் -சாரம். சாராயத்தின் சாரம். போதை ஏறாதா என்ன.
இலங்கையின் தமிழ் மீது எனக்கு மாறாக் காதலே உண்டு. என் கனவு பூமி அது. இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட அங்கு சென்றது இல்லை. ஆனால் எனக்கு நெருங்கிய தேசமாகவே அது மனதுக்குள் கிடக்கிறது. சிறு பிராயத்தில் இலங்கை வானொலி என் வாழ்வில் ஓர் அங்கம். புலர்பொழுதிலே பொங்கும் பூம்புனல் எனத் தொடங்கும் அதன் ஒலியலைகள் நாள் பூராவும் எங்கள் வீட்டில் அதிர்ந்து கொண்டேயிருக்கும். பிறந்த நாள் வாழ்த்துக்காக அம்மா, அம்மம்மா, அப்பப்பா, தம்பி, மாமா என்று மொத்தக் குடும்பமும் வாழ்த்திக் கொண்டிருக்கும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் புகழ்பெற்றது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று கோபால் பல்பொடி விளம்பரங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கும். இரவின் மடியில் தாலாட்டைக் கேட்டுத்தான் தூங்குவோம்.
அப்போது வந்த, எல்லோரையும் ஈர்த்த வானொலி விளம்பரம் ஒன்று கூட நினைவுக்கு வருகிறது. அங்கிள் எனக்கு மனசே சரியில்லை என்று மழலையில் ஒரு குழந்தை கொஞ்சிச் சொல்லும். மனசு சரியில்லை என்பது பெரியவர்களுக்கான வார்த்தை. அதை மழலைக் குரலில் கேட்கும்போதே மனது உருகிவிடும். அடுத்த நிமிடமே கணீர்க்குரலில் ஒருவர் சொல்வார், அப்படிச் சொல்லவேணாம் புள்ள ...ஸ்டார் டொபி சாப்பிடுங்கோ என்று. ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். சரியான விளம்பர வாசகம் தெரியவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் எனக்குப் பிடித்த மற்றொன்று பொப்பிசைப் பாடல்கள். பாப் பாடல்களைத்தான் அப்படிச் சொல்வார்கள். தமிழ்நாட்டின் பாப் பாடல்கள் காது கொண்டு கேட்கச் சகியாது. ஆனால் இலங்கை பொப்பிசைப் பாடல்கள் ரெஹ்னாவின் அம்பர்லா கேட்ட மயக்கத்தைக் கொடுக்கும்.
சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. சின்ன மாமியா உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ. மற்றொன்று அறிவுரைப் பாடல். கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. காலைப் பிடித்து கெஞ்சுகிறேன். கண்கள் வறண்டிடும். கைகால் தளர்ந்திடும். நெஞ்சும் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும்.
திரைப்பாடல்களின் முதல் பத்து வரிசைப்படுத்தல்கள் நிகழ்ச்சியை
இலங்கை வானொலியில்தான் முதலில் செய்தார்கள். இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளின் கிட்டத்தட்ட அத்தனை நிகழ்ச்சிகளும் இலங்கை வானொலியின் காப்பிதான்.
இன்னும் நினைவு எங்கெங்கோ செல்கிறது. சாராய மயக்கத்தால் கட்டுரை நான்-லீனியராக ஆகிவிடக்கூடும். முடித்துவிடலாம். இந்த நேரத்தில் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் குடித்து பலியான 150-க்கும் மேற்பட்ட அந்த கூலித்தொழிலாளிகளின் நினைவு வந்து நெஞ்சை அறுக்கிறது. மதுபான பெருமுதலைகளின் கொள்ளை லாபத்துக்காக இங்கே அரசு, அடிமட்ட கூலிகளுக்கு நல்ல சாராயம் தருவதற்கான கதவை அடைக்கிறது. அவர்களை விஷச் சாராயத்தைத் தேடிப் போக வைக்கிறது. இதற்கு என்ன மாற்று. புரியவில்லை. குடிகாரன் அறிவுரை கூறுவதும் தவறு. வணக்கம்.
Showing posts with label ARRACK. Show all posts
Showing posts with label ARRACK. Show all posts
Sunday, June 1, 2008
Subscribe to:
Posts (Atom)
